ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இந்நிலையில், துறை வாரியாக கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று மக்களவையில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுமா? என்றும் ஆன்லைன் விளையாட்டு பற்றிய வரைவு விதிகளில் ஆன்லைன் சூதாட்டம் இடம்பெறாதது ஏன்? எனவும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், அரசியல் சட்டத்தின் எந்த அதிகாரத்தின் கீழ் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரைவு விதிகளை வெளியிட்டது என்றும் கேட்டார். காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மனீஷ் திவாரி கேள்வி எழுப்பியதற்கு, ஏற்கனவே 19 மாநிலங்களில் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவும், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக மத்திய அரசு சட்டம் கொண்டு வருவதே சரியாக இருக்கும் என்றும் அஷ்வினி வைஷ்ணவ் பதில் தெரிவித்தார்.
அனைத்து மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஒருமித்த கருத்தை எட்டிய பிறகு தான் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழுங்குபடுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். ஆன்லைன் விளையாட்டு, ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து இருப்பதாகவும் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இதனிடையே, திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் தமிழ்நாட்டில் 40 பேர் இதனால் உயிரிழந்து இருப்பதாகவும், இதனை அடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அஷ்வினி வைஷ்ணவ் தமிழ்நாடு ஆளுநர் மசோதாவை கிடப்பில் போட்டிருப்பது குறித்து கருத்து கூற இயலாது எனவும் தெரிவித்தார்.
ஹன்சிகாவின் திருமண வீடியோ ஓடிடியில் – வெளிவந்த டிரைலர்!