தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர்.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த ஆணையம் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தது.
இதையடுத்து ஆணையத்தின் அறிக்கை கடந்த 18 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் பல உண்மை தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
இதில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை வரம்பு மீறி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்பட்டிருந்தது. இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரையின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை காவல் ஆய்வாளர் உள்பட 4 காவலர்கள் 3 தாசில்தார்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; பிரதமருக்கு பறந்த கடிதம்..