தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் நடத்தியுள்ள துப்பாக்கிச் சூடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் உள்பட 10 மீனவர்கள் தங்களது விசைப்படகில் நடுக்கடலில் இன்று (21-10-2022) மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஐ.என்.எஸ் பங்காரம் என்ற கப்பலில் பாதுகாப்புப் பணியிலிருந்த இந்தியக் கடற்படையினர், இம்மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில், திரு. வீரவேல் என்ற மீனவரின் மீது குண்டு பாய்ந்தது.
தற்போது அவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வருவதாக மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவத்தில் இந்தியக் கடற்படையினரின் செயல் மிகுந்த வருத்தத்திற்குரியது என்றும், இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அவ்வப்போது தாக்கப்படுவதால் ஏற்படும் துயரத்தை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் நன்கு அறிவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியக் கடற்படையினரே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது அடித்தட்டில் வாழும் மீனவர்களிடையே நம்பிக்கையின்மையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்துவதாக அமைகிறது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, மாண்புமிகு இந்தியப் பிரதமர் இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, இந்திய கடற்பகுதியில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை, இந்திய பாதுகாப்பு முகமையினர் மிகுந்த எச்சரிக்கையுடனும், நிதானத்துடனும் கையாளுவதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க:படகை நிறுத்தாமல் சென்றதால் மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச்சூடு! அதிர்ச்சியில் மக்கள்