கர்நாடகாவில் தொங்கு பாலத்தில் காரினை ஓட்டிச்சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் -30) மக்கள் கூட்டம் அலை மோதியது. தீபாவளி பண்டிகை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகளவில் மக்கள் பாலத்துக்கு வந்திருந்தனர். அப்போது பொதுமக்களின் எடையைத் தாங்க முடியாமல், அந்தப் பாலம் மாலை 6.30 மணியளவில் அறுந்து விபத்து ஏற்பட்டது. பாலத்தில் இருந்தவர்கள் நதியில் விழுந்தனர்.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் நதியில் மூழ்கியவர்களில் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 140-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாலங்களின் நிலைமை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலாத்தளங்களின் பாலங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ள சம்பவம் பல கண்டனங்களை எழுப்பியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சிவபுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பாயும் காளி ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று உள்ளது. இந்த தொங்கு பாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருவது இயல்பு.
அந்த வகையில், இந்த தொங்கு பாலத்திற்கு மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில வாலிபர்கள் காரில் சுற்றுலா வந்தனர். மேலும், பாலத்தில் காரினை ஓட்டிச்சென்றுள்ளனர். இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்த மக்கள் கத்தியுள்ளனர். ஆனால், இதையும் மீறி இளைஞர்கள் காரை இயக்கியுள்ளனர். இதைச்சார்ந்த காட்சிகள் இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பலரிடத்திலும் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. மேலும், காரை ஓட்டிய இளைஞர்களை கண்டிக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தில்லியில் தொடரும் அவலம்.. 5 மிருகங்கள் ஒன்றாக சேர்ந்து 14 வயது சிறுமிக்கு அரங்கேற்றிய கொடூரம்