சென்னைக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் வரிசையாக இருப்பதால் அடுத்தடுத்து மிதமான மழை இருக்கும் என வெதர் மேன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இதனால் தமிழக-கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு வெதர் மேன் என்று சொல்லப்படும் தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் இலங்கை கடற்பகுதியை ஒட்டி கிழக்கு வடகிழக்கில் உள்ளது, மேலும் இது நமது கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இன்றும் டெல்டா முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் கன மழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிதமான மழை பெய்யும்
நாகை கடற்கரைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது, உள்பகுதிகளிலும் மேற்கிலும் கனமழை பெய்யும், அதுவரை லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யும். எனவே மேற்கு, தெற்கு மற்றும் உள் பகுதிகளில் கனமழை என்பது சற்று தாமதமாக தொடங்கும். அதே நேரத்தில் இன்று முழுவதும் அப்பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.
நேற்று சென்னையை பொறுத்தவரை நகரத்தில் 6-9 செ.மீ வரையில் பரவலான மழை பதிவாகியுள்ளது, நவம்பர் 11-14 வரை சுமார் 30 செ.மீ. மழை பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் அதன் இணை பகுதியான கேடிசியில் இன்று இடைவேளியுடன் மழை பெய்யும். குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை நீடிக்கும். சென்னைக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் வரிசையாக இருப்பதால் அடுத்தடுத்து மிதமான மழை இருக்கும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரு நாளில் 43 செ.மீ. மழை பதிவு! வரலாறு காணாத மழையால் மிதக்கும் ‘சீர்காழி’ மக்கள் அவதி