Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்என்னை பற்றி தந்தையிடம் புகார் செய்த எம் ஜி ஆர்; நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

    என்னை பற்றி தந்தையிடம் புகார் செய்த எம் ஜி ஆர்; நினைவுகளை பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின்

    சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற விழாவில், முதல்வர் ஸ்டாலின், நூற்றாண்டுத் விழாவை துவக்கி வைத்தும் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியிட்டும், எம்.ஜி.ஆர். நூல் வெளியிட்டும் சிறப்புரையாற்றினார்.

    அப்போது உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின்,

    உங்களுடைய பாஸிட்டிவ் வைப் (Positive Vibe) அப்போது எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்காக இருக்கும். இந்த விழாவில் நான் பங்கேற்க முக்கிய காரணமே இந்தக் கல்லூரியின் மாணவிகளாக இருக்கக்கூடிய நீங்கள்தான். ஆர்வத்தோடு, மகிழ்ச்சியோடு நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம், இதோ பக்கத்தில் இருக்கக்கூடிய தியோசபிக்கல் சொசைட்டியில் நான் ஒவ்வொரு நாளும் மாலையின் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நடைப்பயிற்சி வருவது உண்டு.

    அங்கே வீட்டிலிருந்து கிளம்பி வருகிறபோது அருகாமையில் பேருந்து நிலையம் இருக்கிறது. அப்போது கல்லூரி விட்டு வரக்கூடிய மாணவிகளெல்லாம் பேருந்திற்காக இரண்டு பக்கமும் காத்திருப்பார்கள். என் காரைப் பார்த்தவுடன், அவர்களை கிராஸ் செய்கிறபோது, அப்படியே ஒரு உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு, எழுச்சியோடு ஒரு கூக்கூரல், ஒரு சத்தம், அந்த சத்தத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ சத்தம் நினைத்துவிடக் கூடாது, அது உங்களுடைய பாஸிட்டிவ் வைப் (Positive Vibe) அப்போது எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்காக இருக்கும்.

    Physical Fitness எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு Mental Fitness-ம் மிக மிக முக்கியம். அதற்குத் தேவையான பாஸிட்டிவ் வைப் உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் கல்லூரி நிகழ்ச்சிகள் என்றால் உற்சாகமாக கிளம்பி விடுகிறேன்.

    தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர்

    தமிழ்நாட்டினுடைய முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியர் யார் என்று கேட்டீர்களானால், அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள்தான். அவருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இது சிலருக்கு வியப்பாக இருக்கும், அதிர்ச்சியாக இருக்கும், ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது.

    நம்முடைய மதிப்பிற்குரிய ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்கள் இருபதாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமத்துவ – பொதுவுடைமை கருத்துகளை மக்களிடம் எடுத்துப்போகிற அளவிற்கு சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக நடித்து, ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி, காலத்தினுடைய சூறாவளி, ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். அந்த இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் அவருடைய பங்களிப்பு என்பது பதினைந்து ஆண்டுகள்தான்.

    திமுகவில் இருந்த எம்.ஜி.ஆர்

    அந்த வகையில் பார்த்தால் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக ஆண்டுகள், அதாவது 1952-ஆம் ஆண்டு முதல் 1972 வரை தி.மு.க.வில்தான் இயங்கிக் கொண்டிருந்தார். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார். பல கட்டுரைகளில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர் சொல்கிறார்,“நான் கோவையில் இருந்தபோது எனது இல்லத்தில் கலைஞர் அவர்களும் சிறிது காலம் என்னோடு இருந்தார், அப்போது தேசிய இயக்கத்தைச் சார்ந்தவராக நான் இருந்தேன். ஆனால் கலைஞர் அவர்கள் ஒரு சுயமரியாதை கொள்கை பேசுபவராக இருந்தார். அவரை எப்படியாவது எனது கொள்கைக்கு இழுக்க நான் முயற்சித்தேன். ஆனால், இறுதியில் கலைஞர் அவர்கள்தான் வென்றார். நான் தி.மு.க.வில் இணைந்தேன். இதுதான் வரலாறு. ஆக, இன்றைக்கு தி.மு.க.வின் தலைவராக கலைஞரும், நான் பொருளாளராகவும் நானும் இருக்கிறேன்”- என்று எம்.ஜி.ஆர். எழுதி இருக்கிறார். இதெல்லாம் தெரிந்தவர்களுக்கு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பது யாருக்கும் வியப்பாக இருக்காது.

    இன்றைக்கு இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கல்லூரி உருவாகியிருக்கிறது என்றால், பல்லாயிரக்கணக்கான மாணவிகள் இங்கே கல்வி பெறவும் அரசின் அனுமதியை வழங்கியவர் யார் தெரியுமா? முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
    1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தார். அப்போதுதான் அம்மையார் ஜானகி அவர்கள், முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார்கள். வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு கோரிக்கை வைத்தார்கள். “சத்யா ஸ்டுடியோ இருக்கும் இடத்தில் ஒரு காலேஜ் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்”-என்று ஜானகி அம்மையார் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். உடனே தலைவர் கலைஞர் அவர்கள், “நிச்சயம் அனுமதி தருகிறேன்… என்று சொல்லிவிட்டு உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது, உங்களை சந்திக்க நானே விரைவில் வந்து பார்க்கிறேன்”-என்று அவர் சொல்லியிருக்கிறார், சொல்லி இரண்டு நாட்களில் அம்மையாரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் மறைந்து விட்டார். மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சென்றார்கள், அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார், “அம்மையார் ஜானகி அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள், அந்தக் கோரிக்கையை நான் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன்.

    ‘யார் அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தப் போகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வியையும் தலைவர் கலைஞர் அவர்கள் அப்போது கேட்டிருக்கிறார்கள். அப்படி அக்கறையோடு கேட்டு உருவான கல்லூரிதான் இந்தக் கல்லூரி என்பதை நினைக்கும்போது, நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகுவதற்கு எல்லோரும் காரணமாக இருந்திருக்கிறீர்கள், மறுக்கவில்லை. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த நேரத்தில் துணை நின்றவர் தலைவர் கலைஞர் என்று நினைக்கிறபோது, அதுவும் நான் வருவதற்கு முக்கியக் காரணம்.

    ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர். அவர்களை படத்தில் மட்டும் பார்த்தவன் அல்ல நான், தூரத்திலிருந்து பார்த்தவன் அல்ல நான், அவரோடு நெருங்கிப் பழகக்கூடிய வாய்ப்பு எனக்கு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. இதே சத்யா ஸ்டுடியோவுக்கு நான் பல முறை வந்திருக்கிறேன்.சென்னை, சேத்துப்பட்டு கிறித்துவக் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது அங்கு அடிக்கடி ஸ்கூல் டே நடத்துவோம், அப்போது பல இடங்களுக்குச் சென்று donation வாங்குவோம். அப்போது நான் முதலமைச்சரின் மகனாகவே இருந்தேன். அதனால் இவனிடத்தில் நன்கொடை சீட்டு கொடுத்தால் அதிகமாக விற்றுக் கொடுப்பான் என்று பள்ளியில் எனக்கு விடுப்பும் கொடுத்துவிடுவார்கள்.

    உடனே நான் புறப்பட்டு எங்கு வருவேன் என்றால், முதலில் அந்த நன்கொடை சீட்டை எடுத்துக் கொண்டு இந்த சத்யா ஸ்டுடியோவுக்குத் தான் வருவேன். ஷுட்டிங்கில் இருப்பார் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள், பத்மநாபன் தான் அப்போது மேனேஜர், நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவர்தான் நான் அவர் நான் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்-ஐ பார்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து ஷுட்டிங் நடந்துகொண்டிருக்கும்போது இடையில் அழைத்துக் கொண்டு போவார். 250 ரூபாய் டிக்கெட் வாங்கிவிடுவார், அதுதான் அப்போது இருப்பவைகளிலெல்லாம் costly. ஆக, அப்போது அளவுகடந்த பாசத்தையும், அன்பையும் கொண்டவர் நம்முடைய எம்.ஜி.ஆர் அவர்கள்.

    என்னுடைய பாட்டி, தலைவர் கலைஞர் அவர்களுடைய அன்னை அஞ்சுகம் அவர்களிடம் ரொம்ப பாசமாக இருப்பார், ‘அம்மா’ ‘அம்மா’ என்றுதான் அழைப்பார். அடிக்கடி கோபாலபுரத்திற்கு வருகிறபோதெல்லாம் அன்போடு பேசி எல்லோரிடத்திலும் பாசத்தோடு பழகுவார்.ஒருநாள் அவர் வந்தபோது, அவரை ‘சார்’ என்று ஒருமுறை சொல்லிவிட்டேன். உடனே தலைவரிடத்தில் ஒரு புகார் செய்தார், உங்கள் பிள்ளை என்னைப் பார்த்து ‘சார்’ என்று சொல்கிறான் என்று சொல்லிவிட்டார். அதெல்லாம் எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

    அதுமட்டுமல்ல, அவருடைய படம் ரிலீஸ் ஆகிறது என்றால், தியேட்டரில் வரிசையில் நின்று, முதல் ஆள், முதல் டிக்கெட் நான்தான் சென்று வாங்குவேன். அதனால் அவர் படம் ரிலீஸ் ஆனவுடன் முதலில் கோபாலபுரம் இல்லத்திற்கு தொலைபேசி செய்து என்னை அழைத்து, படம் எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்பார். நான் வெளிப்படையாக இது இப்படி இருந்தது, இது அப்படி இருந்தது என்று நான் சொல்வேன். நீங்கள் இந்த சீனில் சூப்பராக நடித்தீர்கள் என்றெல்லாம் சொல்வேன். அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்.

    கோபாலபுரத்தில் நான் சிறுவனாக இருந்தபோது இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பு உருவாக்கியபோது, பல கூட்ட நிகழ்ச்சி நடத்தியிருக்கிறேன். அந்த கூட்ட நிகழ்ச்சிகளுக்கு அழைக்கிறபோது எல்லாம் ஷுட்டிங்கிலிருந்து மேக்-அப்புடன் எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார்.அதற்குப் பிறகு 1971-ஆம் ஆண்டு ‘முரசே முழங்கு’ என்று ஒரு நாடகம், இங்கே பிரசாத் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், நாடகத்தில் ஓமப்பொடி பிரசாத் என்றுதான் அவரை அழைப்போம், அதில் ஓமப்பொடி என்று அவருக்குப் பெயர். அவர் என்னோடு சேர்ந்து நடித்த 40 நாடகங்கள் தமிழ்நாடு முழுவதும் 1971-ஆம் ஆண்டு தேர்தலின்போது நடத்தப்பட்டது. அதன் முதல் அரங்கேற்றம் சைதாப்பேட்டை தேரடி திடல். யார் தலைமை, மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தலைமை. நாடகம் தெருவில் தான் போடுவோம், கொட்டாய் எல்லாம் கிடையாது.

    தெருவில் போட்டிருக்கிறோம், மக்கள் தரையில் உட்கார்ந்திருக்கிறார்கள். முன்வரிசையில் எம்.ஜி.ஆர் அவர்களை உட்கார வைப்பதற்காக சோபா செட் போட்டு வைத்திருக்கிறோம். அவர் வந்தார், முதலில் அதை எடு என்றார். எடுத்துவிட்டோம். அப்புறம் தரையில் உட்கார்ந்து நாடகத்தை முழுவதுமாக பார்த்து என்னைப் பாராட்டி சென்றவர் தான் நம்முடைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். எதற்காக என்றால், மற்றவர்களுக்கு மறைக்கக்கூடாது என்ற அந்த நினைப்புடன் கீழே உட்கார்ந்து பார்த்தார். நான் அதை நினைத்துப் பார்க்கிறேன்.

    அதே நாடகத்தின் நிறைவு விழா திருவல்லிக்கேணியில் இருந்த எம்.கே.டி.கலா மண்டபத்தில் கலைஞர் அவர்களுடைய தலைமையில் எம்.ஜி.ஆர் அவர்களுடைய முன்னிலையில் நடைபெற்றது. அந்த நாடகத்திற்கு கலைஞர் தான் எங்களுக்கு எல்லாம் மோதிரம் போட்டார். எம்.ஜி.ஆர் அவர்கள் எங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், கேடயம் கொடுத்தார். அப்போது கலைஞர் அவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களிடம் சொல்லி, நான் சொன்னால் கேட்கமாட்டேன் என்கிறான், ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறான், படிக்கவே மாட்டேன் என்கிறான், அவனுக்கு புத்திமதி சொல்லிவிட்டு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அதை எம்.ஜி.ஆர் அவர்கள் பேசுகிறபோது சொன்னார். “நீ நடிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் உன் அப்பாவுக்கு ஒரு கவலை, உன் அப்பாவுக்கு இல்லாத அந்தக் கல்வி உனக்கு வந்தாக வேண்டும், அதனால் நீ நன்றாகப் படி, பெரியப்பா என்கிற முறையில் சொல்கிறேன், நீ படிக்க வேண்டும்” என்று எனக்கு புத்திமதி சொல்லிவிட்டுச் சென்றார்.

    ‘உனது பெயரே ஸ்டாலின். பெயரிலேயே புரட்சி தோன்றி விடுகிறது’ என்று என்னை உற்சாகப்படுத்தினார். ‘கலைஞரின் மகன் கலைஞனாகத்தான் இருப்பான்’ என்று என்னை உச்சிமுகர்ந்து பாராட்டினார், அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எம்.ஜி.ஆர். அவர்கள் கதாநாயகனாக – அம்மையார் ஜானகி அவர்கள் கதாநாயகியாக நடித்த முதல் படம் ‘மருதநாட்டு இளவரசி’. அதற்கு கதை-வசனம் எழுதியவர் தலைவர் கலைஞர் அவர்கள். இதில் என்ன வேடிக்கை என்றால், மூன்று முதலமைச்சர்கள் பங்கெடுத்த படம் எது என்று கேட்டால் ‘மருதநாட்டு இளவரசி’ தான். எம்.ஜி.ஆர்., அம்மையார் ஜானகி, தலைவர் கலைஞர், மூன்று பேரும் பங்கெடுத்த வரலாறு. அந்தப் படப்பிடிப்பின்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது என்று கலைஞர் அவர்கள் எழுதியிருக்கிறார்.

    எம்.ஜி.ஆர். அவர்களும் ஜானகி அவர்களும் இணைந்து நடித்த முதல் படத்தை சொன்னேன். கடைசிப் படம் என்ன தெரியுமா? ‘நாம்’. இதற்கு கதை-வசனம் யார் என்று கேட்டால், அதுவும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். சைகை மொழியை – பள்ளி மற்றும் கல்லூரிகளில் மொழிப்பாடமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகள் துறையை முதலமைச்சர் என்கிற முறையில் நான் தான் கையில் வைத்திருக்கிறேன். அந்த வகையில் லதா ராஜேந்திரன் அவர்களுடைய கோரிக்கைகளை செயல் திட்டம் ஆக்குவோம் என்பதை இந்த நேரத்தில் நான் உறுதியோடு தெரிவிக்கிறேன்.

    திராவிட மாடல் ஆட்சியைத்தான் கல்வியில், வேலைவாய்ப்பில் அனைவருக்கும் பங்கு வேண்டும் என்பதற்காக உழைத்த இயக்கம் திராவிட இயக்கம்.இதனுடைய அடிப்படை இலட்சியங்களின் மீது எம்.ஜி.ஆர் அவர்களும், ஜானகி அவர்களும் பற்று கொண்டு செயல்பட்டு வந்தார்கள். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனி இயக்கம் கண்டாலும், தனது கொள்கையில், அண்ணாயிசத்தை அவர்கள் கட்டிக்காத்தார்கள்.அண்ணாயிசம் என்று சொன்னால், ‘சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை ஜனநாயக வழியில் நிறைவேற்ற உழைப்பதுதான் அண்ணாயிசம்’ என்று அவரே வரையறுத்து சொல்லியிருக்கிறார். இத்தகைய அண்ணாயிசத்தில் உண்மையான பற்று கொண்டவர்கள் அனைவருக்கும் திராவிடக் கொள்கைகளைக் காக்கும் கடமை இருக்கிறது.

    அதனை நினைவூட்டக்கூடிய வகையில்தான் இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திராவிட இயக்கக் கொள்கைகளைக் காப்பதும், அதன் மூலமாகத் தமிழ்நாட்டை மேன்மையடையச் செய்வதும்தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், ஜானகி அம்மையார் அவர்களுக்கும் நாம் செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும் என தெரிவித்தார்.

    மறுபடியும் முதல்ல இருந்தா? 48,500 ஆண்டுகளுக்கு பின் புத்துயிர் பெற்றுள்ள கொடிய “ஜாம்பி வைரஸ்”!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....