குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடயுள்ள திரௌபதி முர்மு மற்றும் யஸ்வந்த் சின்ஹா ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு மனுக்கள் அளிப்பதற்கான கால வரையறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவை முதன்மைச் செயலரும், தேர்தல் அலுவலருமான பி.சி.மோடி தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 115 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 28 மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போதே நிராகரிக்கப்பட்டது. மீதமிருந்த 87 மனுக்களில் 79 மனுக்கள் தேவையான நிபந்தனைகளை நிறைவு செய்யாததால் அவைகளும் நிராகரிக்கப்பட்டன. தற்போது எட்டு மனுக்கள் மட்டுமே மீதமுள்ளது.
திரௌபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா தவிர்த்து குடியரசுத் தலைவர் தேர்தலில் சதாரண மக்களும் போட்டியிடுகின்றனர். மும்பையினைச் சேர்ந்த குடிசைவாசி, தமிழகத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர், தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் ஜூலை இரண்டாம் தேதிக்குப் பிறகு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் இத்தேர்தலில் போட்டியிட உள்ளனர்.
பொதுவாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிட விருப்பமுள்ளவரை தேர்வாளர்கள் குழுவிலிருந்து 50 பேர் முன்மொழியவும் 50 பேர் வழிமொழியவும் வேண்டும் என்பதினைக் கட்டாயமாக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
முன்னதாக பத்து பேர் மட்டுமே முன்மொழியவும் வழிமொழியவும் செய்தால் போதும் என்று இருந்தது. இந்த எண்ணிக்கையானது 1997ம் ஆண்டிற்குப் பிறகு 50ஆக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகசூலை அதிகரிக்க உதவும் சணப்பை சாகுபடி!