ஜூலை 11-ம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கினை விசாரித்த தனி நீதிபதி, இதில் தலையிட முடியாது எனவும், மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்தார். இதனை எதிர்த்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு, ஏற்கனவே திட்டமிட்டபடி பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்றலாம் எனவும் மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம் ஆனால், எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது எனவும் தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, கடந்த 23 ஆம் தேதி நடந்த பொத்துக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அறிவித்தார். மேலும், அதிமுக கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என்றும் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றும், நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அவமதித்ததாக அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது
இதுமட்டுமின்றி, அதிமுக கட்சி விதிப்படி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு கூட்டத்தை அறிவிக்க வேண்டும் என்பதால், ஜூலை 11-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், அவைத்தலைவர் நியமனத்துக்கும் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
தொடர்ந்து, இந்த நீதிமன்ற அவமதிப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று இரு நீதிபதிகள் அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், ஏற்கனவே நடைபெற்ற பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.
ஆனால், ஜூலை 11-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை மட்டும் விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டனர்.
இதன்காரணமாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மனுவின் மீதான விசாரணையை மட்டும் ஜூலை 4-ம் தேதிக்கு தள்ளவைத்தனர்.
வருகின்ற ஜூலை 11-ம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள மண்டபத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மீண்டும் உயரும் கொரோனா தொற்று! கலங்கும் மக்கள்