தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது, பேரணி நடத்திய உள்ளூர் மக்களின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்நிகழ்வு பெரும் அதிர்ச்சியை மக்களிடையே ஏற்படுத்தியது.
இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்தும், தூத்துக்குடியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிகழ்ந்த பிந்தைய நிகழ்வுகள் குறித்தும் விசாரணை செய்வதற்காக நீதியரசர் திருமதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..!
இந்நிலையில், தற்போது அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், இறுதி அறிக்கையை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
இந்த அறிக்கையில், காவலர் சுடலைக்கண்ணு தனி ஆளாக அபாயகரமான துப்பாக்கியைக் கொண்டு மொத்தம் 17 ரவுண்டு துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுடலைக்கண்ணு கிரேடு 1 காவலராக நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் மறைந்திருந்து துப்பாக்கியால் சுட்டு பலர் உயிரிழக்க காரணமாக இருந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் சங்கர், அப்போதைய டிஐஜி கபில்குமார் சாராட்கரரின் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் உயிரிழக்க காரணமாக இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையின்படி, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவத்தில் பலரது உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நெல்லை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு உதவி ஆணையராகவும் உள்ள திருமலை, காவலர்கள் சுடலைக்கண்ணு, சங்கர் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு பேரையும் பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ட்விட்டர் நிறுவனத்தில் 75 சதவிகித ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போகும் எலான் மஸ்க்