எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அது போலிச் சான்றிதழாகவே கருதப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரை உயர்நீதிமன்றம் பதிவு திருமணம் குறித்து தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு தம்பதிக்கு பதிவு திருமணம் மட்டும் செய்து, அவர்களது வழக்கப்படி எந்த திருமணச் சடங்கும் செய்யாமல் இருப்பது, அவர்களுக்கு திருமண தம்பதி என்ற அங்கீகாரத்தை அளிக்காது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
இதுமட்டுமல்லாது, பதிவு திருமணத்தில் வழிகாட்டு நெறிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் தம்பதி என பதிவு செய்வோர், அவர்களது முறைப்படி திருமணச் சடங்குகளை செய்துகொள்வது கட்டாயம் என்றும் நீதிபதி ஆர். விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1,337 கோடி அபராதம்; இந்திய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அதிரடி நடவடிக்கை
தனிநபர் சட்டப்படி, ஒரு தம்பதி அவர்களது முறைப்படி திருமணத்தை நடத்தி முடித்த பிறகே, அவர்களது திருமணத்தை தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம் 2009-ன்படி பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கு மாறாக திருமண சடங்குகள் எதையும் மேற்கொள்ளாமல் இச்சட்டத்தில் பதிவு செய்ய முடியாது.
மேலும், ஒரு திருமணத்தைப் பதிவு செய்வதற்கு முன்பு, அவர்களுக்கு அவரவர் முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது, பதிவுத் துறை அதிகாரிகளின் கடமை என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ‘திருமணச் சடங்குகள் நடைபெற்றிருக்கிறதா என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இரு தரப்பினரும் அளிக்கும் திருமணப் பதிவு விண்ணப்பங்களை வெறுமனே இயந்திரக்கதியில் பதிவு செய்யக் கூடாது. ஒரு வேளை, எந்த திருமணச் சடங்கும் நடைபெறாமல், ஒரு தம்பதிக்கு திருமணப் பதிவு சான்றிதழ் அளிக்கப்பட்டிருந்தால், அந்த சான்றிதழ் போலி திருமணப் பதிவுச் சான்றிதழாகவே கருதப்படும்’ என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 108 ஆம்புலன்ஸால் அடுத்தடுத்து நடந்த கோர சம்பவங்கள்; நிறைமாத கர்ப்பிணி உட்பட 2 பெண்கள் பலி