திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களின் செல்போனை பாதுகாக்க 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பக்தர்களின் செல்போனை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு அறை திறக்கப்பட்டிருப்பதாகவும், இதற்காக 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் திருச்செந்தூர் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளை கோயிலுக்கு அழைத்து வர இலவச வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், இவர்கள் இல்லாத பொழுது மற்ற பக்தர்களை அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அதேபோல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூபாய் 300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளர்ச்சி பணிகள் 2024 ஆம் ஆண்டு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார். மேலும் கோயிலின் உள் பிரகாரத்தில் 11 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் வருகிற பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, பக்தர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டு வருகிற யாத்திரை நிவாஸ் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவதார் திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?