‘நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர், அவரது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்‘ என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ஆம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படுகிறது.
ஶ்ரீமதி இறந்த வழக்கில் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ஜின்னா, மாணவி பயன்படுத்திய கைபேசியை ஒப்படைக்கும்படி ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் இன்னும் ஒப்படைக்கவில்லை என்று கூறினார்.
இதையடுத்து, ஶ்ரீமதியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, கைபேசியை ஒப்படைத்தால் தான் விசாரணை நடத்த முடியும் என்பதெல்லாம் இல்லை என்றும், செல்போனை ஒப்படைப்பது குறித்து விளக்கத்தை பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
அப்போது குறுக்கீட்ட நீதிபதி, உடற்கூறாய்வு மூலம் எப்படி இறந்தார்கள் என்பதை மட்டுமே தெரிந்துகொள்ள முடியும். மரணத்திற்கான காரணத்தை கண்டறிய கைபேசி உரையால்கள் அவசியம். மேலும், நியாயமான விசாரணை கேட்கும் மனுதாரர், அவரது மகள் பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 15-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிக்க இளைஞர்கள் போட்ட பிளான்! என்ஐஏ அதிரடி நடவடிக்கை