சபரி மலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரமாக பல்வேறு விதிமுரைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் குறைந்திருப்பதால், எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்களின் வருகை எப்போதும் வருவதை விட 40 முதல் 50 சதவீதம் அதிகமாகவே இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக கேரள அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து செல்லும் பக்தர்களுக்காக அந்தந்த மாநிலங்களும் ஏற்பாடுகளை செய்து வருகின்றன.
இந்நிலையில் சபரி மலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டது.
அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி, அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என அச்சிடப்பட்டிருந்தது. இதனிடையே இந்த அறிவுறுத்தல் தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாக கூறி அதனை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சபரிமலையில் 10 வயதுக்கு கீழும் 50 வயதுக்கு மேலும் உள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதிமுறையே தொடரும் என்றும், நீதிமன்றத்தின் பழைய உத்தரவு தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாகவும் கேரள தேவசம் வாரியத்தின் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அத்தியாவசியப் பொருட்களின் விலைக் கண்காணிப்பு மேம்பாட்டுப் பணி: அமைச்சர் சக்கரபாணி