புதுச்சேரியில் காவல்துறை பணியில் எம்பிசி இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் 300-க்கும் மேற்பட்டோர் சட்டசபை நோக்கி ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடையைமீறி சட்டமன்றத்திற்கு ஓடி சென்று முற்றுகையிட்ட அவர்கள் போலீசார், மீது தண்ணீர் பாட்டில், கற்கலை வீசியனர் இதனால் இருவருக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், தீயணைப்புத்துறை டிரைவர் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர், வாகன ஆய்வாளர் ஆகிய பணிகளுக்கு அரசு தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசின் அறிவிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இடம் பெறவில்லை.
இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததை கண்டித்தும், முன்பு இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை பின்பற்றவும், பெரும்பான்மை வன்னிய சமுதாயத்தை வாழ்வாதாரத்தை அழிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இன்று ஊர்வலம் நடைபெறும் என அறிவித்தனர்.
இதன்டி இன்று காலை 11 மணியில் இருந்து புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து இருசக்கர வாகனம், ஆட்டோ, டெம்போ, வேன் மூலம் பாமகவினர் அண்ணா சிலை அருகே திரண்டனர்.அங்கிருந்து 11.30 மணியளவில் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு மாநில அமைப்பாளர் கணபதி தலைமை வகித்தார். ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி,ஜன்மராக்கினி கோவில் வழியாக சட்டப்பேரவை நோக்கி வந்தது. போலீஸார் ஆம்பூர் சாலை அருகே தடுப்புகளை அமைத்து ஊர்வலத்தை தடுத்தனர். ஆனால், ஊர்வலத்தில் வந்தோர் தடுப்புகளை தள்ளி முன்னேற முயன்றனர். இதற்கிடையில் ஊர்வலத்தின் பின்புறத்தில் இருந்து போலீஸாரை நோக்கி தண்ணீர் பாக்கெட், கற்கள் வீசப்பட்டன. ஊர்வலத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய போலீஸார் இல்லை.
இதனால், போலீஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் போலீஸாரை தள்ளிவிட்டு, சட்டப்பேரவை நோக்கி பாமகவினர் ஓடினார்கள். இதையடுத்து சட்டப்பேரவை நுழைவாயில்கள் மூடப்பட்டன.அங்கு பாமகவினர் கோஷம் எழுப்பியபடி அதிகளவில் வந்ததால் பதட்டம் ஏற்பட்டது.
சட்டமன்றம் நுழைவு வாயில் முன்பு திரண்ட பாமகவினரிடம் அங்கிருந்து ஆம்பூர் சாலைக்கு செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.இதனால் பாமகவினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாமகவினரை தலைமை நிர்வாகிகள் சமாதனப்படுத்தியதால் ஆம்பூர் சாலை பகுதிக்கு சென்றனர். அங்கு இடஒதுக்கீட்டினை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம் என கூறி விட்டு பாமகவினர் திடீரென கட்டுப்பாடுகளை மீறி சட்டமன்றத்திற்கு ஓடி வந்ததால் மருத்துவமனை, சட்டமன்றம் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் ஏற்பட்டது. அரை மணிநேரத்திற்கு போலீசார் தடுமாறி விட்டனர்.பாமகவின் திடீர் தள்ளுமுள்ளு மற்றும் முற்றுகையால் சில செய்தியாளர்கள் மற்றும் போலீசார் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து காயமடைந்தனர்.
இதையும் படிங்க: ரூ.24.71 கோடி செலவில் 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள், வளாகங்கள் திறப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்