காதலர் தினத்தை முன்னிட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் ரோஜா பூக்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.
உலகம் முழுவதும் வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலை வெளிப்படுத்த பொதுவாக ரோஜாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. காதலின் அடையாளமாக இருப்பது இதய வடிவம் என்றால் அதற்கு நிகராக பார்க்கப்படுவது ரோஜாக்கள் தான்.
இந்நிலையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரோஜாக்களை இறக்குமதி செய்ய நேபாள அரசு தடை விதித்துள்ளது. அதன்படி, நேபாள தாவர தனிமைப்படுத்துதல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மையம், தாவர நோய் அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறி, இந்தியா மற்றும் சீன எல்லையில் உள்ள 15 சுங்க சாவடிகளில் ரோஜா பூக்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளது.
நேபாள தாவர தனிமைப்படுத்துதல் மையம் மற்றும் பூச்சிக்கொல்லி மேலாண்மை மைய அதிகாரி மகேஷ் ஆச்சார்யா, ரோஜா பூக்கள் மற்றும் பிற தாவரங்களின் மூலம் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், இதுபோன்ற நோய்கள் குறித்த முறையாக ஆய்வுகள் எதுவும் செய்யப்படாததால் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், நடப்பு நிதி ஆண்டில் முதல் 6 மாதங்களில் 1.3 மில்லியன் மதிப்புள்ள 10,612 கிலோ ரோஜா பூக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய மகேஷ் ஆச்சார்யா, தற்போது இந்த முடிவு சந்தையில் ரோஜாக்களின் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என்றும், காதலர் தினத்தன்று நேபாளத்தில் சுமார் 3,00,000 ரோஜா பூக்கள் விற்கப்படுவதாகவும் ஆனால், நேபாளத்தில் 20,000 ரோஜா பூக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
இளைஞர் வெட்டிக்கொலை; ராமநாதபுரத்தில் பரபரப்பு!