ரோஜா மலரைத் தருதல், காதலைக் கூறல், இனிப்புகளைப் பரிமாறுதல், வாக்குறுதிகளை அளித்தல் என நகர்ந்து கொண்டிருக்கும் காதல் தின வரவேற்பின் கொண்டாட்டங்களில் இன்று அரவணைத்தல் தினம் எனும் ஹக் டே!
காதலில் மிக முக்கிய சிறப்பம்சமாக காதலர்களால் உணரப்படுவது ஒருவரை ஒருவர் அணைத்துக்கொள்ளுதல்தான். அணைத்துக்கொள்ளுதலில் , தேற்றல், பரிவு, பகிர்தல், ஆனந்தம், துக்கம் என அனைத்தும் கலந்திருக்கும். எவ்வளவோ உணர்வுகள் அணைத்துக்கொள்ளுதலில் கலந்திருந்தாலும், தேற்றலும், காதலும் அணைத்துக்கொள்ளுதலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது, உணரப்படுகிறது.
உறவுகளை பற்றிய மேற்கொண்ட ஆய்வில், தற்போதைய காலக்கட்டத்தில் இணைகள் ஒருவரையொருவர் காமம் அற்று அணைத்துக்கொளவது குறைந்து விட்டதாய் ஆய்வியலாளர்கள் கூறுகின்றனர். மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ உறவின் பிளவிற்கும், உறவில் ஏற்படும் சச்சரவுகளுக்கும் இவை காரணமாக அமைவதாகவும் ஆய்வியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தேற்றலின் போது நேரும் அரவணைப்புகளுக்கு என்று பிரத்யேக உணர்வுகள் இருப்பதை மனித மனம் எளிதில் உணர்ந்துக்கொள்ளும் ஆனால் ஒப்புக்கொள்ளாது. தேற்றலின் போது நிகழும் அரவணைப்பில் யாருக்கு தேற்றல் நிகழ்கிறதோ அவர்கள் தங்களின் துயர நிறையினை சிறிது நேரமாவது இழந்ததாக கருதுவர்.
காதல் என்ற
பூக்களின் வனத்தில்
அரவணைப்பிற்கு
வண்ணத்துப் பூச்சிகளின் சாயல்!
தேற்றலின் போது மட்டுமே, அணைக்க வேண்டும் என்பதில்லை. அணைப்பின் வழியே அல்லது அணைப்பின் மூலம் வெளிப்படும் அன்புக்காக, நான் இருக்கிறேன், நாம் இருக்கிறோம் என்ற உணர்வுகளை கடத்த என பல உணர்வுகளின் அடிப்படையில் அணைத்தல் நிகழும், நிகழ்கிறது.
காதலர் தினத்தை வரவேற்கும் பொருட்டு கொண்டாடப்படும் இன்றைய ஹக் டே எனும் அரவணைத்தல் தினத்தில் காதல் ஆதியாய் இருக்க அணைப்புகள் நிகழட்டும்.