புதுச்சேரி: முன்விரோதத்தால் கல்லூரி மாணவனை வெட்டி கொல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள ஜி.என்.பாளையத்தை சேர்ந்தவர் செழியன் (வயது 20). கல்லூரி மாணவரான இவர் பகுதி நேரமாக கேட்டரிங் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வீட்டில் இருந்து பைக்கில் கிளம்பி வேலைக்காக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அரும்பார்த்தபுரம் பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், செழியனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதனால் செழியன் கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் வேலையன், உதவி ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் கை, கால்களில் வெட்டுக்காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த செழியனை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி வில்லியனூர் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றவாளிகள் ரோகித், முகேஷ், சேகர் உள்பட 4 பேர் கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .
இதனையடுத்து கொலை குற்றவாளிகள் 4 பேரையும் கைது செய்த போலீசார், சேகர் என்பவரிடம் மட்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மற்ற 3 பேரும் என்பதால் அவர்களிடம் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நேபாளத்தை தொடர்ந்து தில்லியிலும் நிலநடுக்கம்; இதுவரையில் 6 பேர் பலி