ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்ததால் அவரை சுட்டதாக, கைதான டெட்சுயா யமாகாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கும் மேல்சபைத் தேர்தலுக்காக ஜப்பான் நாட்டில் உள்ள நாரா நகரத்துக்கு பிரசாரம் செய்ய சென்றிருந்தார்.
நகரத்தின் சாலை ஒன்றில் நின்று ஒரு சிறு கூட்டத்தின் முன்பு ஷின்சோ அபே பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது, டெட்சுயா யமாகாமி என்னும் நபர் துப்பாக்கியால் அவரது நெஞ்சை நோக்கி சுட்டார்.
நெஞ்சில் குண்டிபட்ட ஷின்சோ அபேவை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், சிகிச்சை பலனின்றி ஜப்பான் நாட்டு நேரப்படி நேற்று மாலை 5:03 க்கு அவரது உயிர் பிரிந்தது.
ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட டெட்சுயா யமாகாமியை சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. அந்த துப்பாக்கியை தானே வடிவமைத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெட்சுயா யமாகாமி ஜப்பான் கடற்கரை தற்காப்புப் பிரிவு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும், ஷின்சோவைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனே அங்கு வந்ததாகவும், அவர் மீது கடும் அதிருப்தியில் இருததாகவும் காவல் துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதிருப்தியில் கொலை செய்ததாக டெட்சுயா யமாகாமி கூறியுள்ளதால், அவரது அதிருப்திக்கான காரணம் என்ன என்று ஜப்பான் நாட்டு காவல் துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
ஜப்பானில் கைத்துப்பாக்கிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டைப் பொறுத்த வரை, ஒரு துப்பாக்கி வாங்குவதற்கு குறைந்த பட்சம் 95 சதவீத மதிப்பெண்களுடன் துப்பாக்கிச் சுடும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே படுகொலை