தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்துக்கு தற்காலிகமாக தடை உத்தரவினை மதுரை உயர்நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலிப்பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்காக, பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது.
இந்த அறிவிப்புக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எதிர்ப்புகளும், புகார்களும் வந்துகொண்டே இருந்தது. இதனையடுத்து பல மாவட்டங்களிலும் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.
அரசுப்பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியர் பணித்தேர்வு இந்த வருடம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த செயல்முறை முடிந்து புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த காலமாகும் என்பதால் தற்காலிகமாக ஆசிரியர்களை நிரப்புவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்திருந்தது.
இதனை எதிர்த்து ‘ஆசிரியர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கம்’ சார்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளைல் அளித்திருந்த மனுவின் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில் தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின் போது, நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், தகுதியின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கும், முன்னுரிமை அடிப்படையில் நியமிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்ற கருத்தினையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த செயல்பாட்டின் மூலம் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும் தங்களுக்குத் தெரிந்தவர்களை பணியிலமர்த்த வாய்ப்புள்ளதாகவும், தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்தானது என்று ஏற்கனவே தனது கருத்தினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: கால அவகாசம் நீட்டிப்பு!