மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் அவருக்கு நெருக்கமான தோழியாக இருந்தவர் சசிகலா. மேலும், இவருடைய குடும்பத்தினரும் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்தனர்.
சசிகலாவின் குடும்பத்தினர் தமிழ்நாடு முழுவதும் பல சொத்துக்களை வாங்கி குவித்தனர். இது தொடர்பாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலா மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு குற்றம் உறுதியடைந்த நிலையில், 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, நான்கு ஆண்டு சிறைக்காலம் முடிந்து வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், இதுவரை சசிகலாவின் சொத்துக்கள் ரூபாய் இரண்டாயிரம் கோடிக்கும் மேலாக முடக்கப்பட்டுள்ளது என அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பின், சசிகலாவுக்கு பல சோதனைகள் ஏற்பட்டு வருகிறது. அவ்வகையில், கட்சியும், ஆட்சியும் பறிபோனது. இதனைத் தொடர்ந்து, ஒன்றிய அரசும் தங்களின் சோதனை நடவடிக்கையில் மிகுந்த தீவிரம் காட்டியது.
குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு எப்போதும் இல்லாத வகையில், தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அறையில் சோதனையையும் மேற்கொண்டனர்.
அப்போது, வருமான வரித்துறை நடத்திய மிகப்பெரிய சோதனையாகவே கருதப்பட்டது. சசிகலா மற்றும் அவருடைய உறவினர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட 150 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த தீவிரமான சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத பல கோடி ரூபாய் வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது. அதனடிப்படையில், 4430 கோடி ரூபாய் வருமான வரி இணைப்பு செய்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சசிகலாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டு வருகிறது. இன்று, சென்னையில் உள்ள தி நகரில், சசிகலாவின் பினாமி பெயரில் செயல்பட்ட ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் என்ற நிறுவனத்தை, அமலாக்கத்துறையினர் முடக்கினர். இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூபாய் 15 கோடி ஆகும். இதுவரையில், சசிகலா மற்றும் அவரது பினாமி பெயரில் ரூ. 2 ஆயிரம் கோடிக்கும் மேல் சொத்துக்கள் முடக்கப்பட்டிருப்பதாக, அமலாக்கத் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை: கால அவகாசம் நீட்டிப்பு!