அரசுப் பள்ளி மாணவிகள் ரூ.1000 உதவித்தொகை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி பயின்று, உயர்கல்வி படிக்க நினைக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாதம் 1000 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகள் அனைவரும், மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால், அரசுப் பள்ளி மாணவிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தத் திட்டத்துக்காக ரூபாய் 698 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கும் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவிகளின் பயன்பெற வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி வரை இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கல்வியாண்டில் இருந்தே அரசு பள்ளிப் மாணவிகளுக்கு 1,000 ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவிகள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கான சான்றிதழ், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி அடையாள அட்டை, ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவற்றை முறையாக பெற்று, சமூக நலத்துறையினுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும், உயர்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனையடுத்து, அனைத்து கல்லூரிகளிலும் இது தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதுவரைக்கும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் 1,000 ரூபாய் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பத்தை விண்ணப்பித்துள்ளனர்.
உதவித் தொகை பெற விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், ஜூலை 10 தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், இதுவரையிலும் விண்ணப்பிக்காத மாணவிகள், இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.