அதிமுக கட்சியில் நடந்து வரும் உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த மாதம் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திலும், ஒற்றைத் தலைமை பிரச்சினை தான் முக்கிய பேசுபொருளாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனும், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக இருக்க, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் வெளிநடப்பு செய்தார். பிறகு, உடனடியாக டெல்லி செல்லவே, அரசியல் விமர்சகர்கள் பிரதமர் மோடியுடன் ஆலோசிக்கத் தான் அவர் டெல்லி சென்றிருக்கிறார் எனக் கூறினார். ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, நான் திரவுபதி முர்முவின் ஜனாதிபதி வேட்புமனுத் தாக்கல் விழாவிற்கு செல்கிறேன் என்றார்.
இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்-க்கு கடிதம் எழுதினார். இதற்கு மதிப்பளித்து எடப்பாடி பழனிசாமியும் பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இபிஎஸ் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள ஓபிஎஸ் அண்ணன் அவர்களுக்கு வணக்கம். தங்களின் 29.06.2022-ஆம் தேதியிட்ட கடிதம் ஒன்றை பத்திரிகைகளின் வழியாகத் தெரிந்து கொண்டேன். பின்னர், மகாலிங்கம் வழியாக எனக்கு கிடைத்தது. கடந்த 23.06.2022 அன்று நடைபெற்ற அதிமுக கழகப் பொதுக்குழு கூட்டத்தில், 1.12.2021 அன்று நடைபெற்ற கழக செயற்குழுவால் கொண்டுவரப்பட்ட கழக சட்ட திட்ட திருத்தங்கள் அங்கீகரிக்கப்படவில்லை. ஆதலால், அந்த சட்ட திட்ட திருத்தங்கள் காலாவதி ஆகிவிட்டது.
அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் என்ற உணர்வில் தாங்கள் எழுதியுள்ள கடிதம் செல்லத்தக்கதே அல்ல. உள்ளாட்சி அமைப்புகளில் இப்போது காலியாக இருக்கும் பதவிகளுக்கு நடைபெற இருக்கும் தேர்தலுக்கு, வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி தேதி 27.06.2022 அன்று முடிவடைந்து விட்டது. இத்தனை நாட்களாக பொறுத்திருந்து, அதிமுக கழகத்தின் வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையிலும், 27.06.2022 அன்று கூட்டப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு தாங்கள் உள்பட எல்லோருக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் 65 பேர் கலந்து கொண்டனர். 4 பேர் உடல்நிலை சரியில்லை என தகவல் தெரிவித்தனர. தாங்கள் இக்கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தங்களின் இந்தக் கடிதம் ஏற்படையதாக இல்லை.
நாம் இருவரும் இணைந்து அழைப்பு விடுத்த, கழகத்தின் பொதுக்குழுவை நடத்த விடாமல் தடுத்து நிறுத்த பல முயற்சிகளை செய்து விட்டு, இப்போது கடிதம் எழுதுவது முறையில்லை என இபிஎஸ் பதில் கடிதம் எழுதினார்.
சிலிண்டர் விலை அதிரடியாக குறைப்பு- வணிகர்கள் மகிழ்ச்சி!