வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை அடிக்கடி உயர்ந்து வந்த நிலையில், தற்போது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது.
அதாவது, வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலையானது 187 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவிப்பு வெளியானது. அடிக்கடி உயர்ந்து வந்த சிலிண்டர் விலை, திடீரென குறைந்திருப்பதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில், ஒரு சிலிண்டர் 2,186 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ‘இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்’ போன்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், 14.20 கிலோகிராம் எடையில் வீடுகளுக்கும், 19 கிலோகிராம் எடையில் வணிகப் பயன்பாட்டுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது.
இந்நிறுவனங்கள் சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலையைப் பொறுத்து, உள்நாட்டில் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து வருகின்றன. இதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் ரூபாய் 1,018.50-க்கும், வணிகப் பயன்பாட்டிற்கான ஒரு சிலிண்டர் விலை ரூபாய் 135 குறைந்து ரூபாய் 2,373 ஆக விற்பனையானது.
இந்த நிலையில், இன்று (ஜூலை 1) முதல், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக குறைக்கப்பட்டு ரூபாய் 2,186-க்கு விற்பனையாகிறது.
அதே சமயத்தில், வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல், 1,018.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதால் அனைத்து வணிகர்கள் மற்றும் ஹோட்டல், டீ கடை நடத்தும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிப்பூரில் திடீர் நிலச்சரிவு! 14 பேர் பலி