நொய்டாவில் மாணவனை ஆசிரியர் ஒருவர் அடித்தே கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் கௌதம் புத்தா நகரில் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ள மாணவர்களிடத்தில், கடந்த அக்டோபர் 6-ம் தேதி அந்த பள்ளி ஆசிரியர் சூரன் மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும்படி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அடுத்த நாள் ஆசிரியர் மாணவன் ஒருவனை கேள்வி கேட்டுள்ளார். பதிலளிக்காததால், ஆசிரியர் கோபமடைந்து சிறுவனை இரக்கமின்றி தலையிலும், முதுகிலும் சரமாரியாக அடித்துள்ளார். சிறுவன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான். சக ஆசிரியர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தில்லியில் உள்ள நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இதையும் படிங்க: வசூல் ராஜா பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு எழுதிய 29 நபர்கள்; காவல் துறை அதிரடி கைது!
மேலும், பலத்த அடி காரணமாக சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவன் ஞாயிற்றுக்கிழமை மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து ஆசிரியர் சூரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆசிரியரைத் தேடி வருகின்றனர்.