அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளை தேர்வு, சம்மந்தப்பட்ட கல்லூரிகளில் தற்போது சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு நிர்ணயித்த கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிப்பதாக மாணவர்கள் தரப்பில் இருந்து புகார்கள் தொடர்ந்து வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அப்படிபட்ட கல்லூரிகளுக்கு தனித்தனியே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் அனைத்து தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பதற்காக முதல் முறையாக கல்விக் கட்டணங்களை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு பெற்று வருகிறது.
தனியார் கல்வி நிறுவனங்களுக்கான கட்டண நிர்ணயக் குழு முதுகலை, இளநிலை மருத்துவப் படிப்பிற்கான கல்விக் கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. இதனைவிட கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் அது குறித்த புகார்களை இளநிலை மாணவர்கள் ddugselcom@gmail.com, முதுநிலை மாணவர்கள் ddpgselcom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம்.
கட்டண விவரங்கள் tnmedicalselection.net என்ற இணையத முகவரியிலும் வெளியிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்குள் நுழைந்த பாகிஸ்தான்..