சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு பணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டு மொத்தமாக ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாக , இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2016 ஆம் ஆண்டு தகவல் பரிமாற்ற உடன்படிக்கை போடப்பட்டது.
வரிசெலுத்துவோர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யும்போது, சுவிஸ் வங்கிக்கணக்கு விவரங்களை சரியாக குறிப்பிட்டுள்ளார்களா என்பதைக் கண்டறியவே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி , கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஸ்விஸ் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் பணம் குறித்த தகவலை சுவிட்சர்லாந்து அரசு வழங்கி வருகிறது.
அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான இந்தியர்களின் வைப்புத்தொகை விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், கடந்த ஆண்டு (2021) நிலவரப்படி ஒட்டு மொத்தமாக ரூ.30,500 கோடிக்கும் மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டான 2020 ஆம் ஆண்டு ரூ. 20,700 கோடியாக இருந்தது. ஓராண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை சுமார் ரூ. 10,000 கோடி அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் 6.5 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் என இருந்த நிலையில் 2011, 2013, 2017, 2020 ஆகிய ஆண்டுகளில் பெரும்பாலும் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணம் அதிகரித்து வந்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் டெபாசிட் செய்யும் பணத்தின் அளவு குறைந்தாலும், 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய எழுச்சி பெற்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் வைத்திருக்கும் பணம் முழுவதும் கருப்புப்பணம் என்று கருத முடியாது என்றும் வரி மோசடி செய்யும் நபர்களாக அவர்களை கருத முடியாது என்றும் சுவிஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி – நெல்சன் கூட்டணி இணையும் திரைப்படத்தின் டைட்டில் இதுதானா? செம்ம மாஸா இருக்கே!