சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து இறந்ததாக சொல்லப்படும் விவகாரத்தில் ராம்குமார் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் மென் பொறியாளர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தது.
பிறகு ராம்குமார், புழல் சிறையில் மின்சார கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டது. மேலும், புழல்சிறை வார்டன் பேச்சி முத்து அளித்த வாக்குமூலத்தில், ராம்குமார் கம்பியை கடித்தபோது, லத்தியால் அவரை தள்ளி காப்பாற்ற முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில், சிறையில் குறைந்த அளவிலான ஊழியர்கள் இருப்பதால் ராம்குமார் மரணத்திற்கு அவர்களை மட்டுமே குறை சொல்ல முடியாது. அரசுக்கும் இதில் பொறுப்பு உள்ளது. சிறையில் போதுமான அதிகாரிகளை நியமிக்க வேண்டியது அரசின் கடமை.
ராம்குமார் மரணம் தொடர்பாக உண்மையை கண்டறிய சுதந்திரமான விசாரணை தேவை. இவரின் மரணத்திற்கு இழப்பீடாக அவரது தந்தைக்கு ஒரு மாதத்தில் 10 லட்சம் ரூபாயை வழங்க வேண்டும் என மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்