அயர்லாந்துக்கு எதிரான இருபது ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அந்த அணி சார்பில், வார்னர் 3 ரன்களிலும் மேக்ஸ்வெல் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். கேப்டன் ஃபிஞ்ச் 63 ரன்கள் எடுத்தார். மேலும், மிட்செல் மார்ஷ் 28 ரன்களும், ஸ்டாய்னிஸ் 35 ரன்களும் எடுத்தனர்.
மொத்தத்தில் ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்பின்பு 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆனால், அயர்லாந்து வீரர்கள் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் 11 ரன்களிலும், கேப்டன் பால்பிர்னி 6 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஏனைய ஆட்டக்காரர்கள் பெரிதாக சோபிக்காமல் போனாலும், லோர்க்கன் டக்கர் 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தத்தில் அயர்லாந்து 18.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், குரூப் ஏ புள்ளி பட்டியலில் 5 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அணி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதையும் படிங்க: தந்தையை கொல்ல 3 லட்சம், தாயுடன் கொன்றால் 5 லட்சம்! கூலிப்படையிடம் பேரம் பேசிய கொடூர மகன்