சொந்த மகனே தனது தாய், தந்தையரை கொலை செய்ய ஆட்களை ஏற்பாடு செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணா. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் கடந்த 2014-ம் ஆண்டு பாலகிருஷ்ணா சொத்துக்களை பிரித்து வழங்கியுள்ளார்.
தற்போது, இதில் மூத்த மகனுக்கான சொத்து அதிக சந்தை மதிப்பை உடையதாக தெரிகிறது. ஆதலால், அண்ணனின் சொத்தைக் கைப்பற்ற தம்பி லட்சுமி நாராயணா முயற்சி செய்து வந்துள்ளார்.
ஆனால், அவரின் முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை. எனவே, முயற்சிகளுக்கு தடையாக இருந்த தாய், தந்தை, அண்ணன் ஆகியோரை கொலை செய்ய லட்சுமி நாரயணா திட்டமிட்டிருந்தார்.
இதையும் படிங்க: புளூ டிக் குறியீட்டை பறிக்க புதிய யுக்தி ..! ஆட் குறைப்பு..! எலான் மஸ்கின் அதிரடி…
இந்த திட்டமிடலை நிகழ்த்த, தனக்கு தெரிந்த சபியுல்லா என்பவரை அழைத்து இவர் பேசியுள்ளார். அவரிடம், தாய் தந்தை அண்ணன் என மூவரையும் கொலை செய்ய வேண்டுமென்றும், தந்தையை கொலை செய்தால் ரூ.3 இலட்சம் என்றும், அவருடன் சேர்த்து தாயை கொலை செய்தால் ரூ.5 இலட்சம் என்றும், அண்ணனை கொலை செய்தால் தனியாக பணம் கொடுக்கிறேன் என்றும் லட்சுமி நாரயணா தெரிவித்துள்ளார். இதற்காக ரூ.30,000-த்தை லட்சுமி நாரயணா முதல் தவணையாக ஷேக் ஷபியுல்லாவிடம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ஷேக் ஷபியுல்லா சிறையில் இருந்து வெளிவந்த ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோருடன் பேசி லட்சுமி நாரயணாவின் தந்தை மற்றும் தாய் ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். இந்நிலையில்தான், திருட்டு வழக்கு சார்பாக ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல் ஆகியோர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட, கொலை செய்வது குறித்தான தகவல்களை காவல்துறையினரிடம் கூறியுள்ளனர்.
தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் ஷேக் ஷபியுல்லா, ஷேக் கவுல் பாஷா, ஷேக் சாகுல், லட்சுமி நாரயணா மற்றும் இவர்களது நண்பரான சுப்பாராவ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.