திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கள்ளச் சந்தையில் தரிசன டிக்கெட் விற்ற விவகாரத்தில் காணிப்பாக்கம் கோயில் துணை நிர்வாக அதிகாரியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம், சிந்தாமணி என்ற பகுதியைச் சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. இவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய 12 விஐபி பிரேக் தரிசன டிக்கெட் தேவை என இடைத் தரகராக இருக்கும் கருணாகர் என்பவரிடம் கேட்டார்.
இதற்கு இடைத் தரகரான கருணாகர், டிக்கெட் ஒன்றுக்கு 3 ஆயிரம் ரூபாய் என 36 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கேட்டுள்ளார். இதன்படி, கேசவ மூர்த்தி 36 ஆயிரம் ரூபாயை பணத்தை கருணாகரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நேற்று திருப்பதி மலைக்கு சென்ற கேசவ மூர்த்தியிடம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை கொடுத்து சுவாமி தரிசனம் செய்ய கருணாகர் அனுப்பியுள்ளார்.
விஐபி பிரேக் தரிசனத்திற்கு பதிலாக 300 ரூபாய் டிக்கெட்டுகளை கருணாகர் கொடுத்ததால், இதுகுறித்து கேசவ மூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கருணாகரை கைது செய்து விசாரணை நடத்தி, பிறகு திருமலை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதன்பிறகு அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் காணிப்பாக்கம் கோயில் துணை நிர்வாக அதிகாரியான மாதவ ரெட்டியின் பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அலுவலகத்தில் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி வந்து கேசவமூர்த்தியிடம் கொடுத்தாக கருணாகர் ஒப்புக்கொண்டார்.
இந்த விசாரணையின் அடிப்படையில், மாதவ ரெட்டியை திருப்பதி மலைக்கு வரவழைத்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதனிடையே, தரிசன டிக்கெட்டுகளை வாங்கி முறைகேடாக கள்ளச் சந்தையில் விற்ற கருணாகரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தற்போது இந்த விவகாரத்தில் மாதவ ரெட்டிக்கும் கருணாகருக்கும் இடையே பணம் பரிவர்த்தனை ஏதேனும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த மாணவி சத்தியா வழக்கு: 4 பேரிடம் ரகசிய ஒப்புதல் வாக்குமூலமா?