புதுச்சேரியில் நிறுத்தப்பட்ட இலவச பேருந்துகளை இயக்க வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி தொழில்நுட்ப கல்வி இயக்குநகரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கிராமப் பகுதியில் இருந்து நகரப் பகுதிக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவிகள் தினசரி தனியார் பேருந்து கட்டணமாக 50 ரூபாய் செலவு செய்யும் சூழல் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு புதுச்சேரியில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு நிறுத்தப்பட்ட இலவச சிறப்பு மாணவர் பேருந்தை உடனடியாக இயக்க வலியுறுத்தியும், புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரி, காலாப்பட்டு அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, கதிர்காமம் மகாத்மா காந்தி அரசு கலைக் கல்லூரி, லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் லாஸ்பேட்டையில் உள்ள உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனரகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் பின்னர், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக தனி அதிகாரி சௌமியாவிடம் புகார் மனுவை அளித்தனர். அப்போது இன்னும் 20 நாட்களில் இலவச பேருந்து செயல்படும் என உறுதி அளித்ததின் பேரில் மாணவர்கள் அங்கு இருந்து கலந்து சென்றனர்.