நாகை மாவட்டத்தில் 3 கிலோ எடை கொண்ட ‘கல் நண்டு’ மீனவர் ஒருவர் வலையில் சிக்கியது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், ஆண்டுதோறும் இந்தக் காலக்கட்டத்தில் மீன்பிடிப்பு அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக, அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை கோடியக்கரை பகுதியில் மீன்பிடி அமோகமாக நடைபெறும். மீனவர்கள் பலரும் இங்கு வந்து தங்கி டன் கணக்கில் மீன் பிடித்து செல்வர். அப்படி பிடிக்கும் மீன்கள் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். மேலும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.
அந்த வகையில், கோடியக்கரை பகுதியில் உள்ள மீனவரின் வலையில் 3 கிலோ எடையுள்ள பெரிய கல் நண்டு சிக்கியது. அப்போது அந்த நண்டை எடுத்து பார்த்தபோது, அதன் வயிற்றில் ஏராளமான முட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த நண்டை ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்து, அதனுள் வென்டிலேட்டர் பொருத்தி, சீர்காழி அடுத்துள்ள தொடுவாயில் உள்ள ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகதிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு பாதுகாப்பான முறையில் நண்டு பராமரிக்கப்படும். அதையடுத்து, நண்டு குஞ்சு பொரித்த பிறகு, அதனை மீண்டும் கடலுக்குள் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி புதிய விமான நிலையம் எப்போது திறக்கப்படும்?