இலங்கையில் பெட்ரோல் விலை குறைக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இதை தொடர்ந்து, இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே கடந்த ஜூலை 15-ம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக கடந்த ஜூலை 15-ம் தேதி பதவியேற்றார்.
இலங்கையின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இன்று இலங்கை மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளதாவது :
- இலங்கையில் 2 ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்ட விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படும்.
- சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோல் விலையும் குறைக்கப்படும்.
- எரிபொருள் விநியோகத்தில் ஜூலை மாதம் கடினமான காலமாக இருக்கும். எவ்வாறாயினும், தற்போது இருக்கும் டீசல் பாதுகாக்கப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்படும். ஜூலை 21-ம் தேதி முதல் பெட்ரோல் விநியோகிக்கப்படும்.
- நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தனி மனிதர் மீதான கருத்து வேறுபாடுகளால் நாடு பாதிக்கப்படுவதற்கு இடமளிக்க வேண்டாம்.
- சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் வெளிநாடுகளுடனான உதவிக்கான கலந்துரையாடல்களும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ரணில் விக்ரமசிங்கே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதமர் தினேஷ் குணவர்தன