இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கையில் சில காலங்களாகவே கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வரும் நிலையில், கடுமையான மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கை நாட்டு மக்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். இலங்கையில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் உணவு பற்றாக்குறையால் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையின் கிழக்கு பகுதியிலிருந்து கடல் வழியாக வேறொரு நாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேர், இருவேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் புதன்கிழமையன்று (மே 18ஆம் தேதி) நடத்தப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
மட்டக்களப்பு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நீண்ட நாள் மீன்பிடி படகொன்று பயணிப்பதை கடற்படையினர் கண்டு உள்ளனர். இதையடுத்து, கடற்படையினர் குறித்த படகை சுற்றி வளைத்து, சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட படகில், சட்டவிரோதமான முறையில் வெளி நாட்டிற்கு பயணிக்க முயற்சித்தவர்கள் இருந்துள்ள நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை கூறுகிறது.
ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு பேரும், 12 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி கடற்பரப்பில் நடத்தப்பட்ட மற்றுமொரு சுற்றி வளைப்பில் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
இந்த சுற்றி வளைப்பில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் இருவரும், 20 முதல் 44 வயதுக்கு இடைப்பட்ட 17 ஆண்களும், 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஆள் கடத்தல் குற்றச்சாட்டில் 4 பேரும் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 40 பேரும் என மொத்தமாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அடுத்தகட்ட விசாரணைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதே நாளில் இலங்கையில் உணவுப் பஞ்சம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தக்காளி விலை மளமளவென உயர்வு; மக்கள் தவிப்பு!