தீபாவளி பரிசாக 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரிய மின் தகடுகளை, சூரத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வழங்கியுள்ளார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவின் பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு போனஸ், பரிசுப் பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றன. அந்த வகையில், சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சூரிய மின் தகடுகளை(சோலார்) தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தொழிலதிபர் கோவிந்த்பாய் தோலாக்கியா கூறியதாவது:
நிறுவனத்தின் ஊழியர்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை மனதில் வைத்தும், அதிகரித்து வரும் எரிசக்தி பயன்பாட்டைக் கருத்தில் கொண்டும் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பரிசாக சூரிய மின் தகடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்களின் வீடுகளில் நிறுவுவதன் மூலம் ஆண்டு முழுவதும் மின்சாரத்தை சேமிக்க முடியும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.
மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ணா எக்ஸ்போர்ட்டரின்-எஸ்ஆர்கே அறக்கட்டளை மூலம் ஆகஸ்ட் மாதத்தில் 750 தியாகிகள் மற்றும் கரோனா முன்களப் பணியாளர்களுக்கு சூரிய மின் தகடுகளை பரிசாக வழங்கியுள்ளோம். வைரம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையில் உலகில் நன்கு அறியப்பட்ட பெயர் எஸ்ஆர்கே. சுமார் 1.8 பில்லியன் டாலர் மூலதனம் கொண்ட இந்த நிறுவனம் தற்போது 6000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விதிகளை மீறி பட்டாசு வெடித்தால் 112 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்; எச்சரிக்கும் சென்னை காவல் ஆணையர்