உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலும் அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை வாசிகள் அதிகம் கூடும் தி.நகர், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி, மோப்பநாய்கள் கண்காணிப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுகிறது. மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று இரவு போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்கு கூடுதல் போக்குவரத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பட்டாசு கடைகளின் உரிமங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. முறையான உரிமங்கள் இல்லாதவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
தீபாவளியின்போது ஒதுக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதையும் படிங்க: இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று: இன்று புதிதாக 2,112 பேருக்கு பாதிப்பு