மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், காரைக்காலைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 10 மீனவர்கள் தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்றனர்.
அப்படி அவர்கள் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, ஐ.என்.எஸ் பங்காராம் என்ற கப்பலில் வந்த இந்திய கடற்படையினர் சந்தேகத்தின் பேரில், துப்பாக்கியால் சுட்டதில் வீரவேல் என்ற மீன்வருக்கு குண்டடிப்பட்டது. இதனால் அவர் பலத்த காயம் அடைந்தார். தற்போது அவர் கூடுதல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் கடற்படை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் இந்திய கடற்படை வீரர்கள் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; பிரதமருக்கு பறந்த கடிதம்..