சக்தி ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக இன்று காலை நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 108 அடி உயரத்தில் 60 கிலோ எடையுடன் 7 செப்பு கோபுர கலசங்கள், 324 சிற்பங்களுடன் மிக பிரம்மாண்டமான ராஜகோபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான குடமுழுக்கு விழா பணிகள் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன், தொடங்கியது.
கடந்த 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் குடமுழுக்கு, வேதங்களின் விதிப்படி கடந்த 2016 பிப்ரவரி 6-ந்தேதி மூலவர், உள், வெளி பிரகாரங்கள், மேற்கு, தெற்கு, வடக்கு கோபுரங்களுக்கு மட்டும் குடமுழுக்கு நடந்தது. இதனை தொடர்ந்து இன்று கல்காரம் எனப்படும் கருங்கற்களால் கட்டப்பட்ட கிழக்கு ராஜகோபுரத்துக்குத் தனியாக குடமுழுக்கு நடத்தப்பட்டது.
இன்று காலை 6.45 மணி முதல் 7.25 மணி வரை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, பல்வேறு நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர், 7 நிலைகள் கொண்ட ராஜகோபுரத்துக்கு ஊற்றப்பட்டு, குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்தனர். சமயபுரம் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். குடமுழுக்கு விழா பாதுகாப்புக்காக 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
418 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த திருவட்டார் கோயில் குடமுழுக்கு