உக்ரைன் நாட்டின் மீது கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 வான்வழித் தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக, உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி கூறியுள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் 138வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள லுஹான்ஸ் மாகாணத்தை முழுவதுமாகக் கைப்பற்றியுள்ள ரஷ்யா ராணுவத்தினர், தற்போது லுஹான்ஸ் மாகாணத்துக்கு அருகில் உள்ள டொனேட்ஸ்க் பகுதியின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
டொனேட்ஸ்க் மாகாணத்தில் போர் தீவிரமடைந்து வருவதால், அங்குள்ள மக்கள் வெளியேற டொனேட்ஸ்க் மாகாண ஆளுநர் கடந்த வாரம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 34 வான்வழித் தாக்குதல்களை உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ளதாகவும், இந்த தாக்குதல்களால் டொனேட்ஸ்க் மாகாணத்தில் உள்ள சாஸிவ் யார் எனப்படும் நகரத்தில் 15 பேர் கொல்லப்பட்டதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
சாஸிவ் யார் நகரத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலைப் பற்றி கருத்து தெரிவித்த உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் தலைமை அதிகாரி அன்ரி யெர்மக், ‘ரஷ்யாவின் இந்த தாக்குதல் ஒரு பயங்கரவாதச் செயல்.’ என்று கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யாவின் பெயரையும் சேர்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இந்த தாக்குதல் பற்றிப் பேசிய லுஹான்ஸ் மாகாண ஆளுநர், ‘ஸ்லோவியான்ஸ்க் நகரத்தில் உள்ள பிலோஹாரிவ் எனும் கிராமத்தில் ரஷ்யா படையினரை, உக்ரைன் வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர். உக்ரைன் வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட இந்த ரஷ்யா படையினர் தங்களைச் சுற்றியுள்ள பகுதிகளை வான்வழி மூலம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலால் மிக்கோளைவ் பகுதியில் உள்ள கருங்கடல் துறைமுகம் முழுவதும் எச்சரிக்கை ஒலி பொருத்திய வாகனங்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. பயங்கர வெடிச் சத்தம் கேட்டதாக அங்குள்ள பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல்!