உக்ரைன் மீது இரஷ்யா போர்த்தொடுத்த நாள் முதல் இன்று வரை அதிக உணர்வுகளை தாங்கியப்படியே பலராலும் கேட்கப்படும் கேள்வியாக, வேண்டப்படும் வரமாக, பெரும் ஆசையாக இருப்பது “ இப்போர் எப்போது முடியும்“ என்பதைப் பற்றிதான்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் பத்தாவது நாளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உக்ரைனின் முக்கிய பகுதிகள் எல்லாம் இரஷ்ய இராணுவத்தால் அழிக்கப்பட, மக்களும் பலியாக தொடங்கினர். இந்நிலையில், உக்ரைனில் உள்ள மக்கள் வேறு நாடுகளுக்கு, உக்ரைனின் வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர்.
உக்ரைனில் சிக்கிய அந்நிய நாட்டவர்கள் அவரவர் நாட்டு அரசுகளினால் மீட்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், பெரும்பான்மையான அந்நிய நாட்டவர்கள் போரின் பத்தாவது நாளான இன்றும் உக்ரைனில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்தியர்களின் சார்பில் பலர் மீட்கப்பட்டாலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நம் இந்திய மாணவர் நவீன் கார்கிவ் பகுதியில் நடைபெற்ற இரஷ்ய தாக்குதலின் போது உயிரிழந்தது, இந்தியர்களின் சோகத்தை இன்னும் அதிகமாக்கியது.
இப்படியான சூழலில், இரஷ்யா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உக்ரைனில் உள்ள அண்டை நாட்டவர்கள் பாதுகாப்பாக உக்ரைனை விட்டு வெளியேற ஏதுவாக தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை இரஷ்யா வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த போர் நிறுத்த அறிவிப்பானது வோல்னோவாகா, மரியுபோல் ஆகிய இரு நகரங்களுக்கு மட்டும்தான் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக அறிவிக்கப்பட்ட இந்த போர் நிறுத்தமானது, உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை முடிந்தவரையில் உபயோகித்துக்கொண்டு அண்டை நாட்டு மக்கள் தங்களின் அரசுகளின் உதவியோடு தங்களின் சொந்த நாட்டிற்கு திரும்பி விடுவர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.