கிரிக்கெட் விளையாட்டிற்கு என்று உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது, ஆஸ்திரேலியன் பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அவர்களின் மறைவு. தனது எதிர் அணிகளின் பேட்ஸ்மென்களை திக்குமுக்காட வைக்கும் வகையில்தான் ஷேன் வார்னேவின் பந்து வீச்சு இருக்கும். வெறுமனே எதிர் அணிகளின் பேட்ஸ்மென்களை கலங்கடித்த ஷேன் வார்னே தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கலங்கச்செய்துள்ளார்.
52 வயதான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள பங்களாவில் மாரடைப்பால் இறந்து கிடந்தார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே அவர்கள் டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
உலக கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் ஷேன் வார்னேவின் இறப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இரசிகர்கள் மத்தியில் நேர்ந்துள்ள துயரம் பெருந்துயரம் என்றால், கிரிக்கெட் வீரர்களின் துயர மனநிலை சொல்லில் அடங்காது. இந்தியா இலங்கை அணிகள் இன்று டெஸ்ட் போட்டி தொடங்கும் முன்பு ஷேன் வார்னேவை நினைவு கூறும் வகையில் அஞ்சலி செலுத்தினர்.
ஷேன் வார்னே விளையாடிய ஆஸ்திரேலியா ஆண்கள் அணியானது பாகிஸ்தான் ராவல்பிண்டியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் வார்னேவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடுகிறது. தற்போது இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய மகளிர் அணியும் வார்னேவின் நினைவாக கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகிறது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் ஷேன் வார்னே அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியும், அவருடனான நினைவுகளைப் பகிர்ந்தும் வருகின்றனர்.