அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் நாளை ஜூலை 16-ம் தேதி அரிசி ஆலைகள் மற்றும் கடைகள் அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒன்றிய அரசு அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல்-அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் டி.துளசிங்கம், ஏ.சி. மோகன், பொருளாளர் கணேஷா அருணகிரி ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது:
அரிசி போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீது ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு என்பது ஏற்புடையதாக இல்லை. அரிசி என்பது அத்தியாவசிய பொருள் என்று சொல்வதைவிட, பசிபோக்கும் மருந்தாகவும் அரிசி இருக்கிறது. இந்தியாவில் அதிகம் அரிசியை பயன்படுத்தும் மாநிலமாக தமிழகம் தான் இருக்கிறது.
மேலும், ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயரும் அபாயமும் உள்ளது. இதுபோன்ற விலை உயர்வால் சாமான்ய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
அரிசியின் இந்த 5 சதவீத வரி உயர்வை வைத்து தான் அரசு இயங்கும் என்ற நிலை இல்லை. இதனை, மற்ற வரிகளில் ஈடு செய்யலாம். இதுகுறித்து பிரதமர் முதல் சம்பந்தப்பட்ட துறைகள் வரை, நேரடியாகவும் மனுக்கள் மூலமாகவும் வலியுறுத்திவிட்டோம்.
மேலும் இதைத்தொடர்ந்து ஒன்றியம் மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வருகிற ஜூலை 16-ம் தேதி தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி சில்லறை விற்பனை கடைகள் அடைக்கப்பட உள்ளது.
இதற்கு, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த அரிசி வணிகர்களும் ஆதரவு தர உள்ளனர். இந்த அடைப்பு போராட்டம் தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களிலும் நடக்க உள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜி.எஸ்.டி என்றால் என்ன?- பாகம் 1