சேலம் பெரியார் பல்கலைக்கழக முதுகலை வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்து அறிக்கை அளிக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட முதுகலை வரலாறு இரண்டாம் செமஸ்டர் தேர்வில், தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றது..
இதையடுத்து இந்த கேள்வி குறித்து விளக்கம் அளித்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், தேர்வுக்கான வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தால் தயாரிக்கப்பட்டது அல்ல, பிற பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தயாரிக்கப்பட்டது என்று கூறினார்.
மேலும், வினாத்தாள் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக அதை முன்கூட்டியே படித்துப் பார்க்கும் நடைமுறை பெரியார் பல்கலைக்கழகத்தில் கிடையாது. சர்ச்சைக்குரிய கேள்வி குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு மறு தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.
பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கேள்வித்தாள் தயாரித்த பேராசிரியர் மீதும் அதற்கு பரிந்துரை செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பருவத்தேர்வில் சாதி குறித்து கேள்வி இடப்பெற்றது பற்றி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத்தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொள்ளப்படும். அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது தாழ்ந்த சாதி?- கேள்வி கேட்டு சிக்கிய பெரியார் பல்கலைக்கழகம்.