உக்ரைன் மீதான போரின் போது சர்வதேச சட்ட விதி மீறல்கள் தொடர்பாக ஐ.நா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் காரணமாக பல பொருட்சேதங்களும் உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இதனிடையே ஐ.நா சபையில் உக்ரைன் அரசு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
இந்நிலையில் உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் ரஷ்யா சர்வதேச விதிகளை மீறி செயல்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதையடுத்து, இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல நாட்டு பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மேலும் அவர்கள் உக்ரைன் மீது நடத்தப்பட்டு போர் குற்றங்கள் மற்றும் சேதங்களுக்கு ரஷ்யா பொறுப்பேற்க வேண்டும் என்றும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அப்போது இந்த விவாதத்தில் பேசிய ரஷ்ய தூதர் வாசிலி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
தொடர்ந்து தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 94 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். மேலும் ரஷ்யா, சீனா, பெலாரஸ், வடகொரியா, ஈரான், சிரியா உள்ளிட்ட 14 நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இதனிடையே இந்த தீர்மானத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை.
பெரும்பான்மையான நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தால், ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சர்வதேச சகிப்புத்தன்மை தினம், பாமக இளைஞர் அணி தலைவர் ஜி.கே.மணி அறிக்கை