புதுச்சேரியில் மழை நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரமும், குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் என வெள்ள நிவாரணமாக அரசு வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்றால் நாங்கள் தாக்கல் செய்வோம் எனவும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை செல்லும் என மூன்று நீதிபதிகளும், மாறுபட்ட தீர்ப்பை தலைமை நீதிபதி உட்பட இருவரும் வழங்கியுள்ளனர். இத்தீர்ப்பில் அகில இந்திய காங்கிரஸ் நிலைப்பாடு வேறாக இருந்தாலும் சமூகநீதியை கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் அத்தீர்ப்பை எதிர்க்கிறோம். பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் எதிர்க்கின்றன என்றார்.
9 நீதிபதிகள் அமர்வில் இடஒதுக்கீடு சமூகத்தின் அடிப்படையிலும் கல்வி அடிப்படையிலும் தரவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளனர். வருமானத்தை மட்டும் கணக்கில் எடுக்கக்கூடாது என இந்திய அரசியலமைப்பு அமர்வு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. ஐந்து சதவீதம் உள்ள மேல்சாதியினருக்கு பத்து சதவீதம் இடஒதுக்கீடும், 95 சதவீதம் இருந்த இதர சமுதாயத்தினருக்கு 90 சதவீதம் இடஒதுக்கீடாகிறது. ரூ. 8 லட்சம் வருமான உள்ள மேல்சாதியினர் அவர்களின் ஐந்து சதவீதத்தில் 2 சதவீதம்தான். இது சமூக நீதிக்கு ஏற்றதல்ல என்றும், சமூக நீதியை காக்கவே முழுமையாக புதுச்சேரி மாநிலத்தில் இதை எதிர்க்கிறோம் என்றார்.
இதையும் படிங்க: முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் நால்வரையும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது: இயக்குனர் கெளதமன்
மேலும் ராஜீவ் படுகொலை வழக்கில் தெளிவாக எதிர்ப்பை தெரிவித்துள்ளேன். மத்திய அரசின் நிலை இதில் பாரபட்சமாக உள்ளது என்றும், மத்திய அரசு வழக்கறிஞர் அந்த தேதியில் உச்சநீதிமன்றத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆயுள்காலம் வரை சிறையில் இருப்பதுதான் ஆயுள்தண்டனை. மத்திய மோடி அரசின் மெத்தனபோக்கின் காரணமாக தீர்ப்பு தரப்பட்டுள்ளது.
அதனால் பேரரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ததற்கு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யவேண்டும். காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்வோம் என்றார். மேலும் மறுசீராய்வு மனுவை 90 நாட்களுக்குள் போடவேண்டும். மத்திய அரசு செய்யாவிட்டால் நாங்கள் மனு தாக்கல் செய்வோம் என்றும், ராஜீவ் கொலையாளிகளை சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மன்னிப்பதாக கூறுவது பெருந்தன்மை. கட்சித்தொண்டர்களாகிய நாங்கள் ஏற்கமாட்டோம் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கனமழையால் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் வெள்ள நிவாரணமும், குடும்பத்துக்கு ரூ. 5 ஆயிரம் வெள்ள நிவாரணமும் தரவேண்டும் என்றும், நிறைவேற்றாத வாக்குறுதிகளும், செயல்படாத முதல்வருமாகத்தான் ரங்கசாமி உள்ளார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கடிதம்