ஸ்பெயினில் ஏற்பட்ட தீவிர வெப்ப அலை காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உலகில் நிலவிவரும் காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பிய நாடுகள் வரலாறு காணாத அளவுக்கு மிகக் கடுமையான வெப்ப அலையை எதிர்க்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை, வரலாறு காணாத அளவில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டியுள்ளது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் வீசிய வெப்ப அலைக்கு கடந்த 10 நாள்களில் 1000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்தது, அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்தின் செய்தித் தொடர்பாளர் ஹெர்வெல்லா கூறியிருப்பதாவது:
நாட்டின் பல பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியதால், கடந்த ஜூலை 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான 10 நாள்களில் 1,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை, உயிரிழந்தவர்களில் 672 பேர் 85 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள், 241 பேர் 75 முதல் 84 வயத்துக்கு உள்பட்டவர்கள், 88 பேர் 65 முதல் 74 வயத்துக்கு உள்பட்டவர்கள் ஆவர்.
மேலும், சுவாசம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களே அதிக அளவில் உயிரிழந்துள்ளனர். இளைஞர்களிடையே முழுமையாக எந்தவித பாதிப்பும் காணப்படவில்லை.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
இந்த வரலாறு காணாத மாற்றம், ஸ்பெயினில் ஏற்பட்ட 2-வது பெரிய வெப்ப அலையாக கருதப்படுகிறது. முதல் வெப்ப அலையானது கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நீடித்தது. இந்த வெப்ப அலையினால், மொத்தம் 829 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.