புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வல்லவன் இன்று வெளியிட்டார். அதன்படி, மொத்த வாக்காளர்கள் 8,40,123 பேர் ஆவர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரியில் 01-01-2023-ஐ தகுதி நாளாக கொண்டு புதுச்சேரி, மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 25 சட்டமன்ற தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல்கள் இன்று வெளியிடப்பட்டது.
இந்த வாக்காளர் பட்டியலானது, இன்று அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வல்லவனால் வெளியிடப்பட்டது.
அதன்படி, மொத்த வாக்காளர்கள் 8,40,123 பேர் ஆவர். ஆண் வாக்காளர்கள் 3,95,974 பேரும், பெண் வாக்காளர்கள் 4,44,027 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 122 பேரும் அடங்குவர். மேலும், இதில் புதிய வாக்காளர்களாக 4,722 பேர் பதிவு செய்து சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த இறுதி வாக்காளர் பட்டியல் இன்று முதல் வருகிற 13-ஆம் தேதி வரை அந்தந்த தொகுதி வாக்குச்சாவடிகளில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயர் மற்றும் விவரங்களை சரிபார்த்துகொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் ஏப்ரல் 1-ஆம் தேதியும், ஜூலை மாதம் 1-ஆம் தேதியும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்ததாவது;
இன்று முதல் புதுச்சேரி மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அகற்றப்படும். பேனர் அகற்றுவது தொடர்பாக விதிக்கப்பட்ட தடை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் பேனர்களை அகற்றும். மீறி அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தெரிவித்தார்.
மதுபானத்தின் மீதான வரியை குறைத்த துபாய்… சுற்றுலா பயணிகளை கவர திட்டமா?