பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேல் தளத்திற்கு மின்தூக்கி மூலமாக சென்ற அமைச்சர் சிவசங்கர் மின்தூக்கியில் ஏற்பட்ட பழுது காரணமாக மின்தூக்கியினுள் சிக்கினார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவகத்திற்கு இரண்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று சென்றிருந்தார்.
பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதல் தளத்திலும், கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி 2-வது தளத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், முதல் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைத்திருவிழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் 2 ஆம் தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு அவர் மின்தூக்கியில் சென்றார். இவருடன் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மற்றும் அரசு அதிகாரிகள் இரண்டு பேர் இருந்தனர்.
அப்போது திடீரென மின் தூக்கி 2-வது தளத்திற்கு செல்லும் முன்பு இடையிலேயே நின்றது. இதையடுத்து சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக அவர்கள் மின்தூக்கியின் உள்ளேயே சிக்கித் தவித்தனர். பிறகு மின்தூக்கியில் ஏற்பட்ட பிரச்சனை சரிசெய்யப்பட்டு இயக்கப்பட்டது. இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள மின்தூக்கிகளை பராமரிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.
மதுபானத்தின் மீதான வரியை குறைத்த துபாய்… சுற்றுலா பயணிகளை கவர திட்டமா?