புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தின் காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், தனி கணக்கு துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படியே, இன்று புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டமானது நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் அதிமுகவின் அழைப்பின் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதேசமயம், தமிழக அரசின் பேருந்துகள் புதுச்சேரியின் எல்லையான கோரிமேடு, முள்ளோடை, கனக செட்டிகுளம், மதகடிப்பட்டு ஆகியவற்றில் நிறுத்தப்பட்டன.
ஒரு சில ஆட்டோக்கள் மட்டும் இயக்கப்பட்டன. புதுச்சேரி அரசின் பேருந்துகள் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் ஒட்டுமொத்தமாக ஏற்றப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.
தனியார் பேருந்துகள் ஏதும் இயக்கப்படாத காரணத்தினால் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது தற்பொழுது வரை சிறிய கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. பாலகம் மற்றும் டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.
காலையில் டெம்போக்கள் இயக்கப்பட்ட போது போராட்டகாரர்களால் டெம்போ கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண்களை குறிவைக்கும் தலிபான்கள்; கண்டனம் தெரிவித்த ஐ.நா