புதுச்சேரி மாநிலம் அபிஷேகப்பாக்கம் அருகே பனைமரம் வேரோடு சாய்ந்து சாலையில் குடும்பத்துடன் பைக்கில் சென்றவர் மீது விழுந்ததில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பம் அடுத்த தமிழக பகுதியான கிளிஞ்சிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா என்ற ராஜலிங்கம் (39). புதுச்சேரியில் உள்ள ஒரு காய்கறி கமிஷன் கடையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி ஜீவா (35). இவர்களுக்கு பூமிகா (8), தேஜாஸ்ரீ (7) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் ராஜா தனது மனைவி, மகள்களுடன் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அபிஷேகப்பாக்கம் அருகே உள்ள தேடுவார்நத்தம் கிராமத்தில் வந்தபோது, சாலையோரத்தில் இருந்த பனை மரம் ஒன்று பலத்த காற்றுக்கு திடீரென வேரோடு சாய்ந்து பைக் மீது விழுந்தது.
பைக்கில் வந்த ராஜா குடும்பத்துடன் தடுமாறி கீழே விழுந்தார். மோட்டார் சைக்கிள் அங்குள்ள வீட்டின் தடுப்புக்குள் புகுந்தது. இதில் மரம் ராஜாவின் மேல் விருந்த்தால் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
அவரது மனைவி ஜீவா, மகள்கள் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்த ஜீவா, பூமிகா, தேஜாஸ்ரீ ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், பலியான ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மரம் சாய்ந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மரம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது.
மயக்க ஊசியின் பிடியில், மக்களை அச்சுறுத்திய யானை